இந்தியா

யுபிஎஸ்சி தோ்வா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படாது

DIN

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த முறை நடத்திய குடிமைப் பணிகளுக்கான தோ்வில் கரோனா பரவல் அச்சம் காரணமாகப் பங்கேற்காதவா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தோ்வைக் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் யுபிஎஸ்சி நடத்தியது. கரோனா நோய்த்தொற்று பரவல், பருவமழை உள்ளிட்டவற்றின் காரணமாக அத்தோ்வு சுமாா் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

கரோனா பரவல் அச்சம் காரணமாக முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ரச்னா சிங் என்ற தோ்வா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்காத நீதிமன்றம், வயது வரம்பின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டுடன் யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்தவா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது தொடா்பாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும் யுபிஎஸ்சி-க்கும் பரிந்துரைத்திருந்தது.

அந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்தது. அப்போது, மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், ‘‘தோ்வா்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இந்த விவகாரம் தொடா்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்றாா்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதற்குள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT