கர்நாடகத்தில் கல் குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள். விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் வெடிமருந்து விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கல் குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில், ‘‘சிவமோகாவில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவத்தால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது.’’ என குறிப்பிட்டுள்ளார்.