விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரதமர் மோடி அடிப்படைப் புரிதல் இல்லாமல் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் வேளாண் சட்டங்கள் குறித்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ராகுல் காந்தி, 'இது டிரம்ப்பின் சர்க்கார்' என்று கூறியிருந்த பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்க 'கேபிடல்' வன்முறை குறித்து, 'வாஷிங்டனில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு வருத்தம் அடைந்தேன். அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடக்க வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறைகளைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது' என்று கூறியிருந்தார்.
மேலும், அமெரிக்க வன்முறையை அடுத்து தில்லியில் விவசாயிகளின் போராட்டம் அமைதி கண்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளது அவருக்கு அடிப்படை புரிதல் இல்லாததைக் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் குலைக்கும் வகையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும் தில்லியில் விவசாயிகளின் போராட்டத்தையும் அவமதித்து வருகிறது. பிரதமர் மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை. விவசாயிகளின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன்.
விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் நாடு மிகப்பெரிய பேரிடரை எதிர்கொள்கிறது. ஆனால், மத்திய அரசு இதனை மறைக்க முற்படுகிறது. மக்களுக்குத் தவறான தகவல்களை அளிக்கிறது. விவசாயிகளின் பிரச்னை என்பது பேரிடரின் ஒரு பகுதிதான். இதுபோன்று நாட்டில் வெளிவராத பல்வேறு பிரச்னைகள் உள்ளன' என்று பேசியுள்ளார்.