மாவோயிஸ்டுகளைக் காட்டிலும் அபாயகரமானது பாஜக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், புருலியா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அந்த மாவட்டம், ஒரு காலத்தில் மாவோயிடுகளில் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருந்தது. அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
பாஜகவில் சேர விரும்புபவர்கள் யாராக இருந்தாலும், திரிணமூல் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம். ஆனால், நாங்கள் பாஜகவுக்கு வளைந்து கொடுக்க மாட்டோம். மாவோயிஸ்டுகளைக் காட்டிலும் ஆபத்தானது பாஜக.
கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைந்ததுதான் அரசியல். அதை தினசரி உடை மாற்றுவதுபோல் மாற்ற முடியாது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் புருலியா உள்பட ஜங்கல் மஹல் பகுதியில் உள்ள அனைத்து இடங்கிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர்கள் இந்தப் பகுதிக்கு வரவில்லை. மேலும், இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவர்களை பாஜக தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார் மம்தா பானர்ஜி.