நடப்பு காரீஃப் சந்தை பருவத்தில் ரூ.1,06,516 கோடி மதிப்பிலான 564.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து அரசு தொடா்ந்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்து வருகிறது.
கடந்த 16-ஆம் தேதி வரை, ரூ.1,06,516.31 கோடி மதிப்புள்ள 564.17 லட்சம் டன் நெல்லை, இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ.) கொள்முதல் செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டு கொள்முதல் செய்த நெல்லின் அளவைக் காட்டிலும் 25.25 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 450.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பு பருவத்தில் 79.24 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.
மொத்தம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 564.17 லட்சம் டன்னில், பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேச விவசாயிகள், தில்லி எல்லையில் 50 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்கள் கொள்முதல் செய்ய சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது தொடரும் என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.