புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2.2 லட்சம் முன்களப் பணியாளர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் 2,24,301 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்களில் 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தில்லியைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். ஒரு மட்டுமே மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
சிறு உடல் நலப் பிரச்னைகள் என்றால், லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்றவை தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறுகையில், உலகிலேயே இந்தியாவில்தான் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை விட மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார்.