தில்லி: குடியரசு தினத்தில் தில்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதால் அவர்களுடன் மத்திய அரசு இதுவரை ஒன்பது கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் எதுவும் இல்லை.
இந்நிலையில் குடியரசு தினத்தில் தில்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களில் பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
ஞாயிறு மதியம் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தங்களது டிராக்டர் பேரணிக்கு முன்னோட்டமாக கடந்த வாரத் துவக்கத்தில் அவர்கள் நடத்திய பேரணியினால் தில்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.