புது தில்லி: மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களிலிருந்து தில்லி வருவோர், கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தில்லியின் சுகாதாரத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த கட்டுப்பாடு மார்ச் 15 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் தில்லி வரும் பயணிகள், கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் நாள்தோறும் பதிவாகும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி நிர்வாகம் இந்த அதிரடி கட்டுப்பாட்டை பிறப்பித்துள்ளது.