கடவுளின் பெயரால் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்வதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்தராமையா ராமர் கோயில் கட்டுமானத்தை பாஜக தனது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “கடவுளின் பெயரில் மக்களின் உணர்ச்சிகளைக் கொண்டு பாஜக விளையாடுகிறது.ராமர் கோயில் கட்டுவதற்காக சேகரிக்கப்பட்ட நன்கொடைகளின் கணக்குகளை வழங்குவது அறக்கட்டளையின் கடமையாகும். தணிக்கை மற்றும் கணக்குகளைக் கேட்பதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்,
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் எங்கள் கிராமத்தில் ஒரு ராமர் கோயிலை கட்டி வருகிறோம். எங்களுக்கும் கூட கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் நம்பிக்கைகள் என்பது எங்களின் தனிப்பட்ட பிரச்னை. அதனை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது. பாஜக தலைவர்கள் ராமர் கோயில் கட்டுவதை தங்கள் அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் ராமர் கோயில் கட்ட நிதி வழங்குமாறு மக்கள் மிரப்பட்டப்படுவதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது