புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, இன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையவுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு ஆந்திரம்-ஒடிஸா கடற்கரையை நோக்கி டிசம்பா் 4-ஆம்தேதி காலை நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தில்லியில் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர், இந்திய வானிலை மைய இயக்குநர், உள்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால் கூறியதாவது:
“அடுத்த மூன்று நாள் வானிலை நிலவரம் குறித்து பிரதமரிடம் கூறினோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளர் விவரித்தார். முதல்கட்டமாக இன்று மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு 29 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 32 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.”