எங்களுக்கு கொண்டாட்டங்களோ வெற்று உரைகளோ தேவையில்லை, தீர்வு வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தி இருந்தார்.
கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து சோகமான செய்திகள் வருகின்றன.
இந்தியாவுக்கு கரோனா மட்டுமே நெருக்கடி அல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும்தான்.
எங்களுக்கு கொண்டாட்டங்களோ வெற்று உரைகளோ தேவையில்லை, ஒரு தீர்வு வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கரோனா பரவலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
நேற்று அவர் , மத்திய அரசின் கரோனா தடுப்பூசி கொள்கை, ஏழைகளை பாதித்து, பணக்காரா்களைப் பாதுகாத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு இணையானது என்று விமர்சித்திருந்தார்.