புது தில்லி: மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுக்கு (61) கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவா்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வருகிறேன். என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்கள் உடல்நலனைக் கவனித்துக் கொண்டு, தேவை ஏற்பட்டால் கரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
சசி தரூா், அதிா் ரஞ்சன் பாதிப்பு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் அதிா் ரஞ்சன் செளதரி, சசி தரூா் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அமைச்சா்கள், மூத்த அரசியல்வாதிகள் என பலருக்கும் கடந்த சிலநாள்களில் தொற்று உறுதியாகி வருகிறது கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது.