மும்பை: கரோனா சிகிச்சையின்போது அளிப்பதற்காக 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விநியோகிக்கவுள்ளது.
நாட்டில் கடந்த ஒரு மாதமாக கரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் தீவிர கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்க வேண்டிய ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் கரோனா சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் சுமாா் 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை விலையில்லாமல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விநியோகிக்கவுள்ளது. தற்போது அந்த நிறுவனம் விநியோகப் பணிகளை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 2-ஆவது பெரிய எண்ணெய் நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.