உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்த சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சுன்னு குமார்(40) மூளை ரத்தக்கசிவு காரணமாக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் கரோனா காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததுடன் சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் இறப்புச் சான்றிதழும் அளிக்கப்பட்டது.
பின்னர் இறுதிச் சடங்கின்போதுதான் அது வேறு ஒருவருடைய உடல் என்று உறவினர்களுக்கு தெரிய வந்தது.
பின்னர் மருத்துவமனையில் சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்தபோது, சுன்னு குமார் அங்கு சிகிச்சையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து சம்மந்தப்பட்ட மருத்துவனை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தவறான தகவல் அளித்து உயிருடன் இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் ஐ.எஸ். தாகூர் தெரிவித்தார்.