விவசாய மசோதாக்களை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிள் விவசாயிகளுக்கு எதிரானவை எனத் தெரிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் டிராக்டர் ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது.
இந்நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற நமாமி கங்கே திட்டத்தின் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதிப்பதாக தெரிவித்தார்.
விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படியே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ” எனத் தெரிவித்தார்.
“விவசாய சட்டங்களுக்கு எதிரான செயல்படும் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவை. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை.” எனத் தெரிகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.