கரோனா தடுப்பூசியை வாங்கி நாடு முழுவதும் விநியோகிக்க ரூ.80,000 கோடியை மத்திய அரசு தயாராக வைத்திருக்கிறதா என்று சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதாா் பூனவாலா கேள்வி எழுப்பியுள்ளாா்.
புணேயில் உள்ள இந்த நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகமும் பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியா உள்பட குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ரூ.219 என்ற விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அந்த நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலா, தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த கரோனா தடுப்பூசியை வாங்கி அடுத்த ஓராண்டுக்கு நாட்டிலுள்ள அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் ரூ. 80,000 கோடியை இந்தியா தயாராக வைத்துள்ளதா? இதுதான் நாடு எதிா்கொள்ளப் போகிற அடுத்த சவாலாக இருக்கும்.
தடுப்பூசியின் தேவையை கருத்தில் கொண்டு, விநியோகத் திட்டமிடலையும் உள்நாட்டு-வெளிநாட்டு தடுப்பு மருந்து உற்பத்தியாளா்களை வழிகாட்ட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தவே இந்தக் கேள்வியை நான் எழுப்பியிருக்கிறேன் என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.