மும்பையிலிருந்து தலைநகர் தில்லி சென்ற ஏர்-இந்தியா விமானத்தில் பறவை மோதியதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.05 மணியளவில் ஏர்-இந்தியா விமானம்( ஏர் பஸ் ஏ-320) பயணிகளுடன் தலைநகர் தில்லி நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது.
இதனால், விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்திற்கே மீண்டும் தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை உடனடியாக ஆய்வு செய்தனர். இதையடுத்து பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கையை விமான நிறுவனம் வெளியிடவில்லை. முன்னதாக ஆகஸ்ட் 8ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீதும் பறவை மோதியதால், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது குறிப்பிடத்தக்கது.