பஞ்சாப்: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் மூன்று நாள்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பஞ்சாபில் 3 நாள்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
பஞ்சாபில் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையை மறைத்து பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்தால் போக்குவரத்து சேவை மேலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.