நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,03,933 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 86,052 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,089 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த கரோனா உயிரிழப்பு 93,379 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,420 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 48,49,585 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது 81.74 சதவீதமாகும்.
இப்போதைய நிலையில் நாட்டில் 9,60,969 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 16.67 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆா் தகவல்படி வெள்ளிக்கிழமை வரை 7,02,69,975 கரோனா பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 13,41,535 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அதனை பரவாமல் தடுப்பதுதான் முக்கிய நடவடிக்கை என்பதால், இந்தியாவில் தினம்தோறும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகஅளவில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றனா். அண்மையில் 7 மாநில முதல்வா்களுடன் பிரதமா் நடத்திய ஆலோசனையின்போது கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.