பிரதமர் மோடி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறாகக் காணொலி பகிர்ந்ததாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த 20 வயதான சோனுகான் என்பவர் வாட்ஸ்அப் குழு ஒன்றில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகவும், உண்மைக்கு புறம்பான வகையிலும் காணொலி ஒன்றைப் பகிர்ந்ததாகத் தெரிகிறது.
பிரதமர் மோடி பிறந்த நாளன்று பகிரப்பட்ட அந்த காணொலியை ஒட்டி உள்ளூர் காவல்நிலையத்தில் அந்த இளைஞர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுருந்தது. இதனையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சோனுகானை கட்ரா காவல்நிலைய காவலர்கள் கைது செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 153 ஏ (குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 501 (அவதூறு என்று அறியப்படும் அச்சிடுதல் அல்லது வேலைப்பாடு), 505 (பொதுக் குழப்பங்களை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் காணொலியை பகிர பயன்படுத்தப்பட்ட செல்போனையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.