மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளும் நிரம்பியுள்ளதால், நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே மும்பை நகரில் நேற்றும், (செவ்வாய்க் கிழமை) இன்றும் கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரில் கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் 24 மணிநேர கனமழை பெய்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 286.4 மி.மீ மழை பெய்துள்ளது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது.
தாதர், மாதுங்கா, கொலாபா, பயந்தர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், தாதர் முதல் மாதுங்கா இடையிலான உள்ளூர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மாதுங்கா முதல் மாஹிம், சர்ச்ச்கேட் முதல் அந்தேரி ஆகிய வழித்தடங்களிலும் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒருசில தொலைதூர விரைவுரயில்சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.