சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள கலியனூர் தேசியநெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் செவ்வாய்க்கிழமை காலை லாரி மோதியதில் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவர் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 45 பேர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கட்டுமான பணிக்குச் செல்ல தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அப்பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சங்ககிரியை அடுத்த கலியனூர் தேசியநெடுஞ்சாலையில் செல்லும் போது டயர் பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்த கூலித்தொழிலாளிகள் இருவர் உள்பட மூன்று பேர் பேருந்தின் பின்புறத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சேலம் அருகே உள்ள வாழப்பாடியிலிருந்து சிமெண்ட் மூட்டைகள் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கிச் சென்ற லாரி எதிர்பாரதவிதமாக பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது.
அதில் பேருந்து ஓட்டுநர் சல்மான் (40) பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டார். மேலும் பலத்த காயமடைந்த இரு கூலித்தொழிலாளர்கள் தீபக் (38) அக்தர் (38) மேல்சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் தீபக் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், அக்தர் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உயிரிழந்தனர்.
பேருந்து பின்புறத்தில் லாரி பலமாக மோதியதில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட லாரி ஓட்டுநர் வாழப்பாடி அருகே உள்ள சிங்கிரிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜமன்னாரை இரு கிரேன்கள் உதவியுடன் சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையிலான வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.