வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஹரியாணா மாநில விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம் மசோதா 2020, விவசாயிகளுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்களால் நிலவுடமை விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படும் என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகள் உள்பட விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணா மாநிலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹரியாணாவின் அம்பாலா பகுதியில் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடித்தனர்.
மேலும் யமுனா நகர் பகுதியில் 3 மணிநேரத்திற்கும் மேலாக விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளான் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.