கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளியை துபைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளித்த காரணத்தால், இந்தியாவில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபை விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து துபைக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை 15 நாள்களுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 18 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் துபைக்கு அக்டோபர் 2-ம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில் கரோனா பாதித்த 2 பேர் பயணம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 4-ம் தேதி ஜெய்ப்பூர் - துபை சென்ற விமானத்தில் பயணித்த பயணி, கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையிலும், விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.