உத்தரப்பிரதேசத்தில் கிராமத்தில் புகுந்த முதலையை மீட்ட பொதுமக்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைக்க ரூ.50 ஆயிரம் கோரிய விசித்திரமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயப் பகுதியில் பெய்த கனமழையால் அருகில் உள்ள மிடானியா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத விதமாக முதலை ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.
இதனையொட்டி வனத்துறைக்குத் தகவல் தெரிவித்த மிடானியா கிராம மக்கள் தாங்களாகவே முதலையை மீட்டனர். இதனையறிந்து வனப் பாதுகாவலர் அனில் ஷா தலைமையிலான வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் முதலையை பாதுகாப்பான பகுதியில் விட முடிவு செய்து கிராம மக்களிடையே முதலையைக் கேட்டுள்ளனர்.
அப்போது முதலையை பாதுகாப்பாக மீட்டதால் தங்களுக்கு ரூ.50 ஆயிரத்தை வனத்துறையினர் வழங்கவேண்டும் எனவும் அதுவரை முதலையை விடுவிக்கப்போவதில்லை எனவும் கிராம மக்கள் கூறியதைக் கேட்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து முதலையை கிராம மக்கள் விடுவித்தனர்.