கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை இந்தியக் கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்தியக் கடற்படையானது வங்கக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடற்படையின் தாக்குதல் கப்பலான ஐஎன்எஸ் கோராவிலிருந்து கப்பல்களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையானது வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இது தொடா்பாக இந்தியக் கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஐஎன்எஸ் கோராவிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது. அந்த ஏவுகணையால் தாக்கப்பட்ட கப்பலானது மிகுந்த சேதத்துக்கு உள்ளாகி தீப்பிடித்தது. ஏவுகணையானது அதிகபட்ச தூரத்துக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் இதேபோன்ற பரிசோதனையை அரபிக் கடலில் இந்தியக் கடற்படை மேற்கொண்டது. அப்போது, ஐஎன்எஸ் பிரபல் தாக்குதல் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் எத்தகைய சூழலையும் எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு பயிற்சிகளில் இந்தியக் கடற்படை ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம் ஜப்பானுடன் கூட்டுப் பயிற்சியை இந்தியக் கடற்படை மேற்கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா கடற்படைகளுடன் இணைந்தும் இந்தியா கூட்டுப் பயிற்சி மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது.