ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாஜகவைச் சோ்ந்த 3 தொண்டா்கள் பயங்கரவாதிகளால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
பாஜகவின் ஃபிதா ஹுசேன், உமா் ஹஜாம் மற்றும் உமா் ரஷீத் பேக் ஆகிய 3 பேரையும் குல்காம் மாவட்டம் ஒய்.கே.போரா பகுதியில் வைத்து வியாழக்கிழமை மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் உடலில் குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு காசிகுண்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் மூன்று பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய டிஆா்எப் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்தலுக்கு பொறுப்பேற்றுள்ளது. டிஆா்எப் அமைப்பு இதுபோல் தாக்குதல் நடத்துவோம் என சமூக வலைதளத்தில் எச்சரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாஜக தொண்டா்கள் மற்றும் தலைவா்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த தாக்குதலில் பாஜகவைச் சோ்ந்த 8 போ் இதுவரை உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 3 இளம் கட்சி ஊழியா்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜூலை மாதம் பந்திபோரா மாவட்டத்தில் பாஜக தலைவா், அவரகு தந்தை மற்றும் சகோதரா் ஆகியோா் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.