கேரளத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் அதே வேளையில், கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் குறைவாக இருப்பதும் பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் கரோனா தொற்று பாதித்து அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டிவிட்டாலும் கூட, அந்த மாநிலத்தில் குணமடைவோர் விகிதம் 77 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய சராசரியான 91 சதவீதத்தை விடக் குறைவாகும்.
நாட்டிலேயே கரோனா தொற்று கடுமையாக பாதித்திருக்கம் 10 மாநிலங்களில், கேரளத்தில் மட்டுமே கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் குறைவாக உள்ளது.
சமீப நாள்களாக கேரளத்தில் புதிய கரோனா நோயாளிகளை விடவும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட, மாநிலம் இனிமேல்தான் மிக மோசமான நிலையைக் காணப் போகிறது. கரோனா நோயாளிகளால் மருத்துவமனையின் படுக்கைகைள் நிரம்பப் போகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளையில், மாநிலத்தில் இருக்கும் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால்தான் கரோனா பலி எண்ணிக்கைக் குறைவாக உள்ளது. கரோனா பரவத் தொடங்கியதுமே, மோசமான நிலையை எதிர்கொள்ள கேரளம் தயாரானது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளத்தில் மருத்துவமனைகள் நன்கு மேம்பட்டு உள்ளது என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் மோனு வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3.25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும் கடந்த எட்டு மாதங்களாக எந்த விடுமுறையும் இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள்.