கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் நவம்பர் 1ஆம் தேதி முதல் புணேவில் பொதுப்பூங்காக்கள் திறக்கப்பட உள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு நிலைமைகளுக்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொதுப் பூங்காக்கள் திறக்கப்படும் என புணே மாநகர மேயர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
நகரத்தின் நிலைமையை மத்திய அரசின் குழு ஆய்வு செய்துள்ளதாகவும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இரண்டாவது அலை நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்த அவர், உள்ளூர்வாசிகள் பூங்காக்களைப் பார்வையிடும்போது தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
விரைவில் இதுகுறித்த எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என முரளிதர் மோஹல் கூறியுள்ளார்.