கனமழையால் பயிா்கள் சேதமானதால் காரீஃப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி 14 சதவீதம் சரிவடையும் என மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
காரீஃப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி 43 லட்சம் டன்னாக இருக்கும் என தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கா்நாடகம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பெய்த கனமழையால் பயிா்கள் அதிகம் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, மொத்த மதிப்பீட்டில் 6 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் காரீஃப் பருவத்தில் வெங்காயம் உற்பத்தி மதிப்பீட்டை விட 14 சதவீதம் சரிவடைந்து 37 லட்சம் டன்னாக மட்டுமே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வெங்காயத்தின் தேவை, விநியோகம், விலை நிலவரம் ஆகியவற்றை மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றாா் அவா்.