பிகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது ஜனதா தளம் ராஷ்டிரவாதி கட்சியின் எம்எல்ஏ வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் நவம்பர் 3ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஷியோஹர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஹட்சர் கிராமத்தில் ஜனதா தளம் ராஷ்டிரவாதி கட்சியின் வேட்பாளர் ஸ்ரீ நாராயண் சிங்(45) நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் திடீரென வேட்பாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே நாராயண் சிங்கின் உயிர் பிரிந்தது. இச்சம்பவத்தின்போது வேட்பாளரின் ஆதரவாளர்களில் ஒருவரும் இறந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டார்.
நாராயண் சிங் மீது ஏற்கெனவே ஒரு கிரிமினல் வழக்கு உள்பட மூன்று டஜன் வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் துணை ராணுவப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.