நாடு முழுவதும் இலவாமாக கரோனா மருந்து கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பிகார் தேர்தலில் வெற்றி பெற்றால் மாநில மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக கட்சி தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வாக்குறுதியாக கரோனா மருந்தை வழங்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதனிடையே இது குறித்து பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கரோனா மருந்தை இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.
மேலும், பொருந்தொற்று பரவி வரும் நிலையில் அதற்கான மருந்தினைப் பெறுவது ஒட்டுமொத்த நாட்டின் உரிமை. கரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் அனைவருக்கும் இலவசமாக கரோனா மருந்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கரோனா மருந்தை நேரடியாக கொள்முதல் செய்து அதனை முன்னுரிமைகளின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டார்.