பிகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிகாரில் உள்ள மக்களுக்கு பிகாரிலேயே வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.
இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிகார் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கடன் தள்ளுபடி, மின்கட்டணத் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மாநில அளவிலான விவசாய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிகாரில் உள்ள மக்களுக்கு பிகாரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பிகாரில் லோக் ஜனசக்தியும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.