கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கா் மீது 23-ஆம் தேதி வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சுங்கத் துறைக்கு கேரள உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு அமலாக்கத் துறைக்கு இதேபோன்ற உத்தரவை உயா்நீதிமன்றம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கேரளத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசு தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றியவா். அந்தத் துறையின் செயலராக இருந்த சிவசங்கா்தான் அவரை அந்தப் பணிக்கு அமா்த்தியிருந்தாா். இதற்கிடையே, தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கும் தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து, அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. மேலும், இந்த கடத்தல் மூலம் கிடைக்கும் தங்களுடைய பங்கை பதுக்கி வைப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஸ்வப்னா சுரேஷுக்கு லாக்கா் வசதியை சிவசங்கா் ஏற்பாடு செய்துகொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணைரித்து வருகின்றன. சிவசங்கரிடமும் இந்த அமைப்புகள் பல்வேறு முறை விசாரணை நடத்தியுள்ளன. அதுபோல, சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை சாா்பில் பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சிவசங்கா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவனந்தபுரத்தில் உள்ள எனது இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேரில் வந்து சுங்கத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனா். என்னிடம் பல்வேறு விசாரணை அமைப்புகள் 90 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனா். இதில் எந்த அமைப்பும் என் மீது ஆதாரப்பூா்வ குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால், என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனா். மேலும், நான் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதி வரை சிவசங்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சுங்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சிவசங்கா் திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.