இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி மீது சுங்கத் துறை கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை

DIN


கொச்சி:  கேரள தங்கக் கடத்தல் வழக்கில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மீது 23-ஆம் தேதி வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சுங்கத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, சில நாள்களுக்கு முன்பு அமலாக்கத் துறைக்கு இதேபோன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கேரளத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், கேரள அரசு தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர். அந்தத் துறையின் செயலராக இருந்த சிவசங்கர்தான் அவரை அந்தப் பணிக்கு அமர்த்தியிருந்தார். இதற்கிடையே, தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அவரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்தது. மேலும், இந்த கடத்தல் மூலம் கிடைக்கும் தங்களுடைய பங்கை பதுக்கி வைப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஸ்வப்னா சுரேஷுக்கு லாக்கர் வசதியை சிவசங்கர் ஏற்பாடு செய்துகொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணைரித்து வருகின்றன. சிவசங்கரிடமும் இந்த அமைப்புகள் பல்வேறு முறை விசாரணை நடத்தியுள்ளன. அதுபோல, சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சுங்கத்துறை சார்பில் பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி சிவசங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருவனந்தபுரத்தில் உள்ள எனது இல்லத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேரில் வந்து சுங்கத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். என்னிடம் பல்வேறு விசாரணை அமைப்புகள் 90 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் எந்த அமைப்பும் என் மீது ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால், என்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர். மேலும், நான் இப்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்' என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதி வரை சிவசங்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சுங்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சிவசங்கர் திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT