புது தில்லி: அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் நவம்பர் மாதம் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி நடைபெறவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்த கூட்டுப்பயிற்சியில் இணைய உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
இது குறித்து இந்தியா வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கடற்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மற்ற நாடுகளுடன் இந்தியா கூட்டு கடற்பயிற்சி மேற்கொள்கிறது. கடற்பகுதியில் நடைபெறவுள்ள கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையும் பங்கேற்கிறது. இந்த கூட்டுப் பயிற்சியானது கலந்து கொள்ளும் நாடுகளின் கடற்படைகளை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் 1992-ஆம் ஆண்டு இந்திய-அமெரிக்க கடற்படைகள் முதன்முதலில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. 2015-இல் இந்த கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் இணைந்து கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவும் இந்த பயிற்சியில் பங்கேற்று வருகிறது.
இதன்மூலம் "க்வாட்' என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இந்திய கடற்பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.