இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரசார செலவுத் தொகையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார செலவின வரம்பை அதிகரிக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் படி வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்த மத்திய சட்டத்துறை அமைச்சகமானது 1961 தேர்தல் சட்ட விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலத்திற்கு மாநிலம் செலவினத் தொகை மாறுபடும். தமிழகத்தைப் பொருத்தவரையில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.