உத்தரப்பிரதேசம் ஹாத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தையொட்டி விளக்கமளிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு தாமாக முன்வந்து அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதற்கு நாடுமுழுவதும் பலத்த கண்டனம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெண்களைக் காக்க தவறிவருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியது. அக்டோபர் 12ஆம் தேதிக்குள் ஹாத்ராஸ் சம்பவம் குறித்து விளக்கமளிக்க மாநில உள்துறை, காவல்துறை மற்றும் ஹாத்ராஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஹாத்ராஸ் இளம்பெண் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.