புது தில்லி: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக, மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை பாஜக நியமித்துள்ளது.
243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக அக்டோபா் 28, நவம்பா் 3, நவம்பா் 7 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் முடிவுகள் நவம்பா் 10-ஆம் தேதி வெளியாகும். இந்த தோ்தல் தொடா்பான பாஜகவின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில், பிகாா் மாநில பாஜக தலைவா்களுடன் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா். கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகியவற்றுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தல் பொறுப்பாளராக தேவேந்திர ஃபட்னவீஸை கட்சித் தலைமை நியமித்தது.
மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும்போது, தோ்தல் பணிகளை முழுமையாகக் கவனித்துக் கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவா்களை நியமிப்பதை பாஜக தலைமை வழக்கமாக் கொண்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, பிகாா் சட்டப்பேரைவத் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டங்களில் தேவேந்திர ஃபட்னவீஸ் பங்கேற்று வருகிறாா். அந்த மாநிலத்துக்கு சில முறை பயணமும் மேற்கொண்டுள்ளாா்.