புது தில்லி: கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை தில்லி அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி மாநில அர்விந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் திங்களன்று பதிவிட்டுள்ளதாவது:
தில்லியில் கரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைக் கட்டணங்களை குறைக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளில் இந்த சோதனையானது இலவசமாகவே செய்யப்படுகிறது. இருந்தாலும் தனியார் ஆய்வகங்களில் இத்தகைய சோதனைகளை மேற்கொள்பவர்களுக்கு இது உதவியாக அமையும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தற்போது தில்லியில் பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.2400 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தநிலையில், அரசின் உத்தரவுப்படி தற்போது கட்டணம் ரூ.800 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்றில் ஒரு பங்கு கட்டணத்திலேயே இனி பொதுமக்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.