பெங்களூரு: கர்நாடகத்தில் வீரசைவர்- லிங்காயத்து சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் முடிவை முதல்வர் எடியூரப்பா ஒத்திவைத்துள்ளார்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையாக வாழும் வீரசைவர்- லிங்காயத்து சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு அச்சமுதாயத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள், மடாதிபதிகள் வலியுறுத்தி வந்தனர். பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீரசைவர்- லிங்காயத்து சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து விவாதித்து முடிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக முதல்வர் எடியூரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, வீரசைவர்- லிங்காயத்து சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து அமைச்சர்கள், சமூகத் தலைவர்கள், பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கலாம்; அவசரகதியில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படக் கூடாது; முழுமையாக ஆராய்ந்த பிறகே முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
வீரசைவர்- லிங்காயத்து சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் விவகாரத்தை பல்வேறு காரணங்களுக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போவதில்லை. தில்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே இந்த விவகாரத்தில் முடிவு செய்யப்படும். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தொலைபேசியில் விவாதித்தேன். பாஜக மேலிடம் விரைவில் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கும் என்றார்.