மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று வலியுறுத்தினார்.
கரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் மிதிவண்டிகளின் பயன்பாடு என்னும் சர்வதேச இணைய கருத்தரங்கில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், மிதிவண்டியை ஓட்டுவது ஆரோக்கியமான, குறைந்த விலையிலான உடற்பயிற்சி என்றும், இதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெறுவதோடு மாசும் ஏற்படுவதில்லை என்றார்.
நாடு முழுவதும் மிதிவண்டி பாதைகளை உருவாக்க வேண்டும் எனக் கூறிய அவர் மிதி வண்டி ஓட்டுவதை ஊக்குவிப்பதற்காக மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநகர போக்குவரத்து அமைப்பில் மிதிவண்டிகளை சேர்க்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை மாநகர நிர்வாகங்கள் எடுக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார்.