புது தில்லி: ஹைதராபாத்தில் கரோனா தொற்றுநோய்க்கு தடுப்பு மருந்தை உருவாக்கி வரும் பாரத் பயோடெக் ஆய்வகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
கரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்வதற்கான தம்முடைய மூன்று நகர பயணத்தின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்து பிரதமரிடம், விஞ்ஞானிகள் விளக்கினார்கள்.
இதுவரையிலான அவர்களது பரிசோதனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். தடுப்பு மருந்தை துரிதமாக உருவாக்குவதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவுடன் இவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று தனது ஆய்வு குறித்து சுட்டுரைப் பக்கத்தில் மோடி கூறியுள்ளார்.
முன்னதாக, ஆமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில்நுட்ப பூங்காவை இன்று காலை பிரதமர் பார்வையிட்டார்.