தில்லியில் புராரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகா் தில்லி நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழக்கிழமை பேரணியைத் தொடங்கிய விவசாயிகளை ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் நேற்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டுகளையும், தண்ணீரைப் பாய்ச்சியும் விவசாயிகளின் போராட்டம் கலைக்க முயற்சித்தனர். ஆனால், தடைகளை மீறி விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியைத் தொடர்கின்றனர்.
இதனால் தில்லி மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தில்லியின் எல்லைப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடையை மீறி விவசாயிகள் உள்ளே நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் மத்திய அரசின் செயலுக்கும், விவசாயிகளின் மீதான தாக்குதலுக்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் புராரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கிரந்திகாரி கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் தர்ஷன் பால், மத்திய உள்துறை அமைச்சகம் இறுதியாக தில்லி புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.