விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் புதன்கிழமை மாலையிலிருந்து வியாழக்கிழமை காலை வரை தொடர்ச்சியாகப் பலத்த மழை பெய்தது. மேலும், அந்த மாவட்டத்தில் சராசரியாக 17 செ.மீ மழைப் பதிவானது.
விழுப்புரத்தில் 27 சென்டிமீட்டர், வளவனூர் 24 சென்டிமீட்டர், வானூர் 13 மரக்காணம் 13 திண்டிவனம் 14 செஞ்சி 15 வளவனூர் 16 மணம்பூண்டி 15 திருவெண்ணநல்லூர் 16 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி இருந்தது.
இரவு 11 மணி தொடங்கி அதிகாலை மரக்காணம் அருகே புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மரக்காணம் வானூர் பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தொடர் மழையின் காரணமாக மரக்காணம் கிளியனூர் பகுதிகளில் 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தன. விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்டு அதிகாலையில் அகற்றினர்.
விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன் மனைவி ராஜேஸ்வரி (35) உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார். புயல் பெரும் சேதம் ஏற்படுத்தாமல் கரையை அடைந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும், வியாழக்கிழமை காலை 10 மணி மழை விட்டும், வழக்கமான பகல் வெளிச்சம் வெயிலோடு இயல்புநிலைக்கு வந்தது.
பலத்த மழையால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், நகராட்சி மைதான காய்கறி சந்தை, இந்திரா நகர் ரயில்வே தரைப்பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. விழுப்புரம் அருகே வாணியம் பாளையம் பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின.
விழுப்புரம் தாமரைக் குளம், பெரிய காலனி சுதாகர் நகர்ப்பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது வீடுகளில் தண்ணீர் புகுந்தன. நகராட்சி மற்றும் தீயணைப்பு நிர்வாகத்தினர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டனர். வறட்சி நிலையிலிருந்த விழுப்புரம் மாவட்டம் ஒரே நாள் மழையில் நீர்வரத்து வாய்க்கால், சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.