அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஆமதாபாத்தில் திங்கள்கிழமை முதல் அமலான இரவு நேர பொதுமுடக்கம் டிசம்பர் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதனைத் தொடர்ந்து நவம்பர் 23 முதல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அகமதாபாத் நகராட்சிக்குட்பட்டப் பகுதியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் விதிக்கப்பட்ட 57 மணி நேர பொதுமுடக்கம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஆமதாபாத் காவல்துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா டிசம்பர் 7 வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளார்.
நவம்பர் 23 முதல் டிசம்பர் 7 வரை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும். இந்த நேரங்களில் மக்கள் பொது சாலைகள், வீதிகள் அல்லது பொது இடங்களில் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.