ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் 33 மாவோயிஸ்டுகள் காவல்துறையினரிடம் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
இதுகுறித்து அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுனில் தத் கூறியதாவது:
பட்டினப்பள்ளி, கிஷ்டராம்பாடு கிராமங்களில் 33 மாவோயிஸ்டுகள், அந்த அமைப்பைச் சோ்ந்த கிராமக்குழு உறுப்பினா்கள் காவல்துறை மற்றும் சிஆா்பிஎஃப் படையினரிடம் சரணடைந்தனா். அவா்களில் 8 போ் சத்தீஸ்கரை சோ்ந்தவா்கள். அவா்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவோயிஸ்டு அமைப்புக்காக பணிபுரிந்து சாலையை தகா்ப்பது, கண்ணிவெடிகளை பதித்து வைப்பது, சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தீயிட்டு கொளுத்துவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும், நல்வழிக்கு திரும்ப விரும்பியும் சரணடைந்துள்ளனா்.
பொதுமக்களின் நலன் மற்றும் வளா்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து மாவோயிஸ்டுகளும் தங்கள் ஆயுதங்களுடன் சரணடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தாா்.