அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் திங்கள்கிழமை மாலை காலமானார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த தருண் கோகோய், கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளுக்காக குவாஹட்டியில் சிகிச்சையில் பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், திங்கள்கிழமை மாலை காலமானார்.
தருண் கோகோய் மறைவை அசாம் சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தருண் கோகோய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவா் குவாஹட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டார். தொற்றிலிருந்து குணமடைந்த அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து, கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவ.2-ஆம் தேதி அவர் ஜிஎம்சிஎச் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலையில் சனிக்கிழமை பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல்நிலை திங்கள்கிழமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.