காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவையில் அவைத் தலைவர் மேஜையில் இருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதை அடுத்து அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூர், ராஜமோகன் உண்ணித்தான், பென்னி பெஹனான், குர்ஜீத் சிங் அவ்ஜலா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் ஆவர். இதில் மாணிக்கம் தாகூர் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி எம்.பி.யாவார்.
இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கையில் கறுப்புபட்டை அணிந்திருந்தனர்.
7 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தில்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.