பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் டிக்-டாக் விடியோ எடுத்த போது எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் பலியானார்.
நவாப்கஞ்ச் மாவட்டத்தில் முடியா பைகம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் திங்களன்று நிகழ்ந்துள்ளது.
கேஷவ் (18) என்ற இளைஞர், டிக் - டாக் விடியோ எடுக்க தனது வீட்டில் இருந்த துப்பாக்கியைக் கேட்டுள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாத தாயும் துப்பாக்கியை எடுத்துக் கொடுத்துள்ளார்.
கேஷவ் துப்பாக்கியை வைத்துக் கொண்டு டிக் டாக் விடியோ எடுத்த போது அது திடீரென எதிர்பாராத விதமாக வெடித்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளைஞரை குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தது, குடும்பத்தில் யாருக்கும் தெரியாததே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.